தமிழர்களை தனி நாடு கோரும் நிலைக்கு தள்ளுகிறீர்களா?
தனிநாடு கோரி முப்பது வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழர்கள், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போருடன் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் தற்போது பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்தான் தங்கள் உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடி வருகின்றார்கள். இவ்வாறான நிலையில் அவர்களைப் புறக்கணிக்குப் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் அவர்களைத் தனிநாடு கோரும் நிலைக்கே தள்ளிவிடும்.”
– இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க.
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் இம்முறை சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவித்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.