தமிழ் அரசியல் கைதிகளைப் பணயம் வைக்கும் கோட்டா! – குற்றஞ்சாட்டுகின்றார் சுமந்திரன்
“தமிழ் அரசியல் கைதிகளைப் பணயக் கைதிகளாக்கி, அரச படையினர் மீதான எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் கைவிடச் சொல்லுகின்ற நிலைமையை கோட்டாபய அரசு உருவாக்குகின்றது. இதற்கு ஒருபோதும் இணங்க முடியாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அதைவிடுத்து அவர்களுடன் பாதுகாப்புத் தரப்பினருக்கும் மன்னிப்பளித்து விடுதலை செய்வதை ஏற்க முடியாது.
தமிழ் அரசியல் கைதிகளைப் பணயக் கைதிகளாக வைத்து, அரச படையினர் மீதான எல்லாக் குற்றங்களையும் கைவிடுமாறு கோருவதற்கு இந்த அரசு முயல்கின்றது. இதனை ஏற்க முடியாது.
தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள். பாதுகாப்புத் தரப்பினர் குற்றவாளிகள் யாரென்றே அடையாளப்படுத்தப்பட்டுத் தண்டனை அனுபவிக்காதவர்கள். இரண்டு தரப்பினரையும் ஒரே பொறிமுறையில் மன்னிப்பளித்து விடுவிப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறுதான் நடக்கும் என்று நாங்கள் முன்னரே எதிர்பார்த்ததுதான்” – என்றார்.