நாளை மாவீரர் நாள்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தலுக்குத் தடை! – மாணவர் ஒன்றியங்களுக்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி கடிதம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்றும் (26) நாளையும் (27) எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் எனத் தெரிவித்து மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான பேராசிரியர் க.கந்தசாமியால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருந்த நிலையில் இந்தத் தடை உத்தரவு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் மாவீரர் நாள் நிகழ்வு மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றமை வழமை. இம்முறையும் நாளை (27) மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்றும் நாளையும் எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் எனத் தெரிவித்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரியான பேராசிரியர் க.கந்தசாமியால் இன்று பிற்பகல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.