மாவீரர் நாளையொட்டி முற்றுகிறது யாழ்ப்பாணப் பல்கலை விவகாரம்! – மாணவர்கள் உள்நுழைய இரு நாட்கள் தடைவிதிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்துவதற்கு மாணவர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதனைத் தடைசெய்வதாக அறிவித்த யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, தற்போது மாணவர்களைப் பல்கலைக்கழகத்தினுள் இரண்டு நாட்கள் நுழைவதற்குத் தடைவிதித்து அறிவித்தல் விடுத்துள்ளார்.
இந்த அறிவித்தல் சகல ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுள் 27.11.2019 மற்றும் 28.11.2019 ஆகிய தினங்களில் உட்பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு யாழ். பல்கலைக்கழக அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அனுப்பிய கடிதத்தில் யாழ். பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் இன்றும் (26) நாளையும் (27) நடத்தக் கூடாது எனக் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.