தேர்தல் தந்திரோபாயங்களை வகுக்க மீண்டும் கூடும் தமிழரசு அரசியல் குழு!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், தேர்தலையொட்டி இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னெடுக்க வேண்டிய தந்திரோபாயம் குறித்து ஆராய்வதற்காக அக்கட்சியின் அரசியல் குழு விரைவில் மீண்டும் ஒரு தடவை கொழும்பில் கூடி ஆராயும்.
நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பியின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இரா.சம்பந்தன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம், எஸ்.எக்ஸ்.குலநாயகம், கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் பங்குபற்றினர்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. சாதக, பாதகங்கள் அலசப்பட்டன.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அதையொட்டி வகுக்க வேண்டிய தந்திரோபாயங்கள், உத்திகள் குறித்து ஆராய்வதற்காக மீண்டும் கொழும்பில் அரசியல் குழுவின் கூட்டத்தைக் கூட்டுவது என்றும் நேற்று தீர்மானிக்கப்பட்டது.