முஸ்லிம் மக்களின் சாபம் கோட்டாவை சும்மாவிடாது! – அவர் வெல்லவேமாட்டார் என அடித்துக் கூறுகின்றார் ரிஷாத்

“எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெல்லவேமாட்டார். ஏனெனில், முஸ்லிம் சமூகத்தின் சாபம் அவரைச் சும்மாவிடாது. எம்மினத்தில் கைவைத்து கொடூரங்களை விளைவித்த இனவாதிகளுக்குப் பாலூட்டி வளர்த்தவர் கோட்டாபயவே. எனவே, இந்தத் தேர்தலில் தோல்வியே அவருக்குப் பரிசாகக் கிடைக்கும்.”

– இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து அக்குரணையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியின் முக்கியஸ்தர் அம்ஜாத் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹலீம் ஆகியோரும் உரையாற்றினர்.

அமைச்சர் ரிஷாத் மேலும் கூறியதாவது:-

“இனவாத, மதவாத கொள்கையோடு நாட்டை ஆளத்துடிக்கும் வேட்பாளர் ஒருவருக்கு பெரும்பான்மை இன பெளத்தர்கள் ஒருபோதுமே வாக்களிக்க மாட்டார்கள். எனவே, இந்தத் தேர்தலில் எல்லா இனங்களையும் சமமாக மதிக்கும் சஜித் பிரேமதாஸவுக்கே அமோக வாக்குகள் கிடைக்கும். பெளத்தர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இனவாதிகளைப் படிப்படியாக அடையாளம் கண்டு வருகின்றனர்.

மஹிந்த அரசில் அளுத்கம சம்பவத்தை ஒரு சில நாட்களில் அடக்கியதாகப் பெருமை பேசுகின்றனர். இவர்கள் பாலுட்டி வளர்த்தவர்களே அளுத்கம கலவரத்தை அரங்கேற்றியதால், அவர்களுக்கு தங்களது சகாக்களை அடக்குவது ஒரு தொலைபேசியிலேயே இலகுவான காரியமாக இருந்தது.

மஹிந்த அரசிலும் மைத்திரி – ரணில் அரசிலும் முஸ்லிம்கள் மீது அட்டுழியம் நடத்தியவர்கள் மொட்டு இனவாதிகளே. எனவே, இந்த அரசில் இனவாதிகளின் அட்டூழியத்தைக் கட்டுப்படுத்த கொஞ்ச நாட்கள் எடுத்தன.

இந்த அரசில் சட்டமும் ஒழுங்கும் பொலிஸும் ஓரளவு நியாயமாக இருப்பதனாலும் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதனாலும் இனவாதிகளின் செயற்பாடுகள் முடிந்தளவு கட்டுப்படுத்தப்பட்டன. குற்றம் செய்தோர் கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். ஆனால், கடந்த அரசில் அளுத்கம, தம்புள்ள, கிராண்ட்பாஸ் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட்டோர் ஒருவரேனும் கைதுசெய்யப்படவில்லை. பொலிஸில் எத்தனையோ முறைப்பாடுகள் பதியப்பட்டபோதும் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து வந்த உத்தரவால் எவருமே கைதுசெய்யப்படவும் இல்லை. விசாரிக்கப்படவும் இல்லை.

நாம் தொடுத்த பல்வேறு வழக்குகளின் காரணமாக இனவாத தேரர்கள் கொஞ்சம் மெளனமாக இருந்தனர். எனினும், இவ்வருடம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நிம்மதியைத் தொலைத்தார்கள். சமூக வலைத்தளங்கள் மூலமும் இனவாத ஊடகங்கள் மூலமும் சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கையை முழுநாட்டினதும் முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி பிரசாரம் செய்தனர். இஸ்லாத்தையும் புனித ககுர் ஆனையும் இந்தப் பயங்கரவாத நடவடிக்கையுடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தினர்.

சகோதர தமிழ் மக்கள் போன்று போரால் அழிவையும் அகதி வாழ்வையும் முஸ்லிம் சமூகமும் சந்தித்தது. போர் முடிந்த பின்னரும் அதே அழிவும் அகதி வாழ்வும் தொடர்கின்றது. இனவாதிகள் எங்களை அமைதியாக வாழவிடுகின்றார்கள் இல்லை. அப்பாவி சிங்கள மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடப்பார்க்கின்றார்கள். உசுப்பேற்றுகின்றார்கள்” – என்றார்.

இந்தக் கூட்டத்தில் கண்டி மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன், அக்குறணை மத்திய குழு அமைப்பாளர் இல்யாஸ் உட்படப் பலர் உரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *