கோட்டாவே வெள்ளை வான் சூத்திரதாரி! கடத்தியோரைச் சித்திரவதைசெய்து முதலைகளுக்குத் தீனி போட்டார்கள்!! – இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவங்களை அம்பலப்படுத்தினார் முன்னாள் சாரதி ஒருவர்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டவர் கோட்டாபய ராஜபக்சவே. அவரால் அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டனர். சடலங்களை மொனராகலை – சீத்தாவக்கை காட்டுப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் போடுவார்கள். அந்தக் குளத்திலுள்ள முதலைகளுக்குச் சடலங்கள் இரையாகின.”

– இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வெள்ளை வான் ஒன்றின் சாரதியாகப் பணியாற்றினார் எனக் கூறப்படும் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபோதே குறித்த சாரதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வெள்ளை வான் கடத்தலுக்குப் பயன்படுத்திய வான்களின் ஒன்றினது சாரதியாக நானும் பணிபுரிந்துள்ளேன்.

இந்தக் கடத்தலுக்குப் பொலிஸாரும், இராணுவத்தினரும் பெரிதும் ஒத்துழைப்புகளை வழங்கினர். கடத்தல் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச பிரிகேடியர் ஒருவருக்கும், மேஜர் ஒருவருக்கும் ஆலோசனைகளை வழங்குவார். அவர்களே இதனை வெற்றிகரமாகச் செயற்படுத்துவர். நபர்களைக் கடத்துவதற்கு வாகனமொன்று பயன்படுத்தப்படுவதுடன், அவர்களை மறைத்து வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தும் இடத்துக்கு பிறிதொரு வாகனத்திலேயே அழைத்துச் செல்வார்கள்.

இந்த இடங்களில் அவர்கள் மறைத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். பின்னர் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக அவர்கள் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படுவார்கள். இவ்வாறு பல கொடுமைகள் செய்த பின்னர் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள்.

பின்னர் சடலத்தில் உள் உறுப்புகளை அகற்றிவிட்டு மொனராகலை – சீத்தாவக்கை காட்டுப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் போடுவார்கள். அந்தக் குளத்தில் 100 இற்கும் அதிகமான முதலைகள் வாழுகின்றன. அந்தக் குளத்திலுள்ள முதலைகளுக்குச் சடலங்கள் இரையாகின. இன்றும்கூட நீங்கள் அந்தக் குளத்தை சோதனையிட்டால் மனித எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும்.

நான் இவர்களுடன் இணைந்து செயற்பட்டபோது இருவர் இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அதில் இரண்டாவது நபரான 60 வயதுடைய ஒருவரைக் கடத்தும்போது அவரது பிள்ளை கதறியதைப் பார்த்ததும் எனக்கு அங்கிருக்க மனவருத்தமாக இருந்தது. பின்னர் இங்கிருந்து சென்று விகாரையொன்றில் வாழ்ந்து வந்தேன். ஆனால், மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இவர்களுக்கு எதிராக முறைப்பாடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்.

இந்த விவகாரம் தொடர்பில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியபோது, அந்தப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்தவர் அதனை விசாரணைக்குட்படுத்தாமல் மறைத்து விட்டார். பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கலாம் என்று அவர்களிடம் பேச்சு நடத்தியபோது ஊடகங்களும் இதனை வெளியிட மறுத்து விட்டன.

இந்தநிலையிலே அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளார் என்று தெரியவந்ததை அடுத்து அவரிடம் தெரிவித்தேன். பின்னர் அவர் எனக்கு உதவுவதாகக் கூறினார். அதற்காகவே இந்த ஊடக சந்திப்பை மேற்கொண்டுள்ளேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *