வரதராஜப்பெருமாள், பிள்ளையான், கருணா போன்ற தமிழினத்துரோகி அல்ல சம்பந்தன்! – ராஜபக்ச அணிக்கு ஐ.தே.க. தக்க பதிலடி

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் தலைவராவார். அவர் ராஜபக்ச அணியினருடன் கைகோர்த்து நிற்கின்ற வரதராஜப்பெருமாள், பிள்ளையான், கருணா போன்ற தமிழினத் துரோகி அல்லர். தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருதியே புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு சம்பந்தன் ஆதரவு வழங்கியுள்ளார். எனவே, அவரை விமர்சித்து கருத்து வெளியிடுவதை ராஜபக்ச அணியினர் உடன் நிறுத்த வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை மேடையில் தனி ஈழக்கொடியை உயர்த்திய வரதராஜப்பெருமாள் நிற்கின்றார். அவர் மாத்திரமன்றி பிள்ளையான், கருணா அம்மான், ஹிஸ்புல்லா, அப்துல் ராசிக் போன்றோரும் நிற்கின்றனர். ஆனால், எமக்கு ஆதரவு வழங்கியிருக்கும் சம்பந்தன் இவர்கள் போன்றவர் அல்லர். அவர் நாட்டின் தேசிய கீதம் ஒலிக்கையில், அதற்கு எழுந்து நின்று மரியாதை அளிப்பதுடன், ஒருமித்த நாட்டை ஏற்றுக்கொண்டவராவார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில் சில ஊடகங்கள் பெரிதும் பக்கச்சார்பாக செயற்படுவதைக் காணமுடிகின்றது. அவ்வாறு செயற்படும் தனியார் ஊடகமொன்றை இனிவரும் காலங்களில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு அனுமதிக்காமல் எமது எதிர்ப்பை வெளியிடவுள்ளோம். அதேபோன்று அந்தத் தனியார் ஊடகத்துக்கு அரச தலைவர் தேர்தல் விளம்பரங்களையும் வழங்காமல் இருப்பதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்.

நாம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதேவேளை, அதனைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கைகளையும் எடுப்போம் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *