சஜித் ஆதரவு அணிகளுக்கிடையில் புதிய கூட்டணிக்கான உடன்படிக்கை! – 40 அரசியல் கட்சிகள், 18 சிவில் அமைப்புகள் கைச்சாத்து
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய ஜனநாயக முன்னணி என்ற அரசியல் கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இன்று காலை நடைபெற்ற நிகழ்விலேயே புதிய அரசியல் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புதிய கூட்டணியின் பொதுச் செயலாளர் ராஜித சேனாரத்ன முன்னிலையில் மொத்தம் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 18 சிவில் அமைப்புகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்தப் புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்றுக் குழுவாக இணைந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரத்தில் இணைந்துகொண்டுள்ள கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் சார்பில் அவற்றின் பிரதிநிதிகளே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.