புதிய ஜனநாயக முன்னணி உடன்படிக்கை கைச்சாத்து! – நாளை தாஜ் சமுத்திரா ஹோட்டலில்
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உதயமான புதிய ஜனநாயக முன்னணி என்ற அரசியல் கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வு காலை 8.30 மணிக்கு கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெறும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உட்பட மேலும் சில கட்சிகளின் சார்பில் அவற்றின் பிரதிநிதிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள்.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய, விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகளும், சிவில் அமைப்புக்களுமே புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன.