பிரதான வேட்பாளர்களுடன் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுக்கள் தொடரும்! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நடத்திவரும் பேச்சுக்கள் தொடரும். ஐந்து கட்சிகள் கூட்டு உருவாக்கப்படுவதற்கு முன்னரே கூட்டமைப்பு இந்தப் பேச்சுக்களை ஆரம்பித்துவிட்டது. அந்தப் பேச்சுக்கள் தொடர்ந்தும் இடம்பெறும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொலைபேசியூடாக அவர் மேலும் கூறியதாவது:-

“5 கட்சிகள் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பொது ஆவணத்தைத் தயாரிப்பதற்கு முன்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுடன் பேச்சை ஆரம்பித்தது. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுடன் பேச்சு நடத்தியுள்ளோம். இந்தப் பேச்சுக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்கும்.

5 கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளுடனேயே பேச்சு நடத்தமாட்டோம் என்று பிரதான வேட்பாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், நாம் (கூட்டமைப்பு) அவர்களுடன் ஏற்கனவே நடத்தி வருகின்ற பேச்சுக்கள் தொடர்ந்து இடம்பெறும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *