கோரிக்கைகளை நிராகரிக்கின்ற கோட்டாவுடன் பேசத் தயாரில்லை! – மாவை எம்.பி. அதிரடி
“தமிழ்க் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தத் தயாரில்லை.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நியாயமான நிலைப்பாடுகள், அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்புகள் என்பவற்றை உள்ளடக்கியதாகவே எமது 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தோம். அவ்வாறு இருக்கையில் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் யாரோ அவர்களுடன் நாம் பேச்சு நடத்துவோம்.
இது குறித்து ஆராய எமது கோரிக்கைகளை உருவாக்கிய 5 தமிழ்க் கட்சிகளும் இந்த வாரத்தில் கூடி ஆராயவுள்ளோம். இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த வாரத்தில் ஒரு தினத்தில் நாம் 5 கட்சிகளும் கூடி ஒரு உறுதியான நிலைப்பாட்டை எட்டுவதுடன் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளோம்.
எம்முடன் பேசத் தயாராகவுள்ள கட்சிகளையும் சந்தித்து நிலைப்பாடுகள் குறித்து ஆராய்வோம். புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ எமது கோரிக்கைகளை ஆராய்ந்துள்ளாரா என்று எமக்குத் தெரியவில்லை. ஆனால், எம்முடன் பேசத் தயாராக உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே, நாம் அவருடன் பேசுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது” – என்றார்.