ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நாம் வலிந்து சென்று பேசவேமாட்டோம்! ஆதரவு தேவையென்றால் வரவேண்டும்!! – சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சு நடத்த நாம் தயாரில்லை. எமது ஆதரவு தேவை என்றால் அவர்கள்தான் தேடிவரவேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 5 தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து பொது ஆவணத்தை தயாரித்துள்ளன. அந்த ஆவணத்திலுள்ள 13 விடயங்களை முன்வைத்தால் அவர்களுடன் பேச்சு நடத்தமாட்டேன் என்று ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கட்சிகள் பொது ஆவணத்தை முன்வைத்து பிரதான வேட்பாளர்களிடம் பேசுவது என்று தீர்மானித்திருந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச மேற்படி நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது,
“கட்சிகள் கோரினால் நாம் பேச்சு நடத்தத் தயார். அவர்களின் பின்னால் நாங்கள் போகவேண்டியதில்லை. எங்களின் ஆதரவு தேவை என்றால் அவர்கள்தான் தேடிவரவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளான எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்” – என்றார்.