இனி ஐந்து கட்சிகளும் இணைந்தே தெற்குத் தலைமைகளுடன் பேச்சு! – சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

“பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஐந்தும் ஒன்றிணைந்தே இனிமேல் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தென்னிலங்கைத் தரப்புகளுடன் பேசும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடம் தமிழர் தரப்பின் கோரிக்கைகளைக் கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய 5 தமிழ்க் கட்சிகள் பொது இணக்கப்பாடு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ச, அநுரகுமார திஸாநாயக்கா ஆகிய மூவருடனும் பேசுவோம். அவர்கள் இவ்விடயத்தில் எம்மைப் பேச்சுக்கு அழைக்கும்போது நாம் இப்போது மூன்று கட்சிகள் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்லர், ஐந்து தமிழ்க் கட்சிகளுடன் இணைந்த நிலையில் உள்ளோம், ஐந்து தரப்புகளும் ஒன்று சேர்ந்தே பேச வருவோம் என அவர்களிடம் தெரிவிப்போம். அதனடிப்படையில் ஐந்து கட்சிகளும் சேர்ந்தே பேச்சுக்குச் செல்வோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *