சஜித்துடன் கைகோர்த்த ஏக்கநாயக்க திடீர் ‘பல்டி’ – கோட்டாவுடன் இன்று சங்கமம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யூ.பி. ஏக்கநாயக்க, கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்த நிலையில் நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் முதலாவது பிரதான தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட டபிள்யூ.பி. ஏக்கநாயக்க தனது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார்.
மூத்த அரசியல்வாதிகளான டபிள்யூ.பி. ஏக்கநாயக்க மற்றும் அதாவுத செனவிரத்ன ஆகியோர் கடந்த 2ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் அமர்ந்திருந்து ஊடகவியலாளர் சந்திப்பையும் கொழும்பில் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.