தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரா? – எங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார் மஹிந்த
“ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் களமிறக்கப்படவுள்ளார் என்ற தகவல் எமக்கு இன்னமும் கிடைக்கவில்லை.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் என்று ‘உதயன்’ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் பேராதரவுடன் வெற்றியடைவார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று சிலர் தப்புக்கணக்குப் போடுகின்றனர். ஆனால், அந்த மக்கள் தங்கள் மனச்சாட்சியின் பிரகாரம் கோட்டாபயவுக்கே வாக்களிப்பார்கள். அந்த மக்களின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவுள்ளார் என்ற தகவல் எமக்கு இன்னமும் கிடைக்கவில்லை” என்று மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.