கோட்டாவுக்கு முதல் வெற்றி! – மஹிந்த பெருமிதம்
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைப் பிரஜாவுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணையின் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டமையை நினைத்து நாம் பெருமிதம் அடைகின்றோம். இந்தத் தீர்ப்பு கோட்டாபயவுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். இந்த வெற்றியில் எம் மக்களுக்கும் பங்குண்டு.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளரிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாதவர்கள் திரைமறைவில் நின்று அவருக்கு எதிராகப் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தொடுத்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அடியோடு நிராகரித்து வழக்கத்தைத் தள்ளுபடி செய்துள்ளது மேன்முறையீட்டு நீதிமன்றம். இது அவருக்கு எதிராகச் சதிவேலைகளைச் செய்ய முயன்றவர்களின் முகத்தில் அடித்தால் போன்றுள்ளது. எமது அணியின் வெற்றிப் பயணம் தொடரும். நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும்பான்மையுடனான வாக்குகளுடன் கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்பார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ரணில் அரசின் ஆட்சி கவிழ்வது உறுதி” – என்றார்.