கோட்டாவின் தலைவிதி இன்று மாலை நிர்ணயம்! – மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைப் பிரஜாவுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும், உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நேற்றுமுன்தினமும் நேற்றும் விசாரணைகள் நடைபெற்றன.

இன்றும் விசாரணைகள் தொடர்கின்றன. இந்த விசாரணைகளை அடுத்து, கோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான நீதியரசர்கள் அர்ஜுன் ஒபேசேகர, மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வழக்கையொட்டி மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *