மைத்திரி – மஹிந்த இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!! – கோட்டா, பஸிலும் பங்கேற்பு; முடிவு எதுவும் வெளியாகவில்லை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது நாளைமறுதினம் திங்கட்கிழமை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நடைபெறுவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி இன்று நடைபெற்ற மைத்திரி – மஹிந்தவுக்கிடையிலான சந்திப்பின்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் சின்னம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது எனத் தெரியவருகின்றது.
எனினும், இந்தச் சந்திப்பில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்பட்டதா எனத் தெரியவரவில்லை.