இறுதி முடிவுக்காக 30ஆம் திகதி கூடுகிறது சு.கவின் மத்திய குழு!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.
அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க எம்.பி. இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடுமா அல்லது பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு ஆதரவளிக்குமா என்பது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், கூட்டணி அமைப்பது குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பேச்சுகளை முன்னெடுத்து வந்தாலும் சின்னத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக கலந்துரையாடல்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
‘மொட்டு’ சின்னத்தைக் கைவிடுமாறு சுதந்திரக் கட்சியால் விடுக்கப்படும் கோரிக்கையை ஏற்பதற்கு பொதுஜன முன்னணி மறுத்து வருகின்றது.
இரு தரப்புக்கும் இடையிலான இறுதிச் சுற்றுப் பேச்சு எதிர்வரும் 30ஆம் திகதி காலை நடைபெறவுள்ளது. அதன்பின்னரே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக சு.கவின் மத்திய செயற்குழு கூடவுள்ளது.