நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு: அமைச்சரவையில் நிராகரிப்பு! – ரணிலின் சகாக்களான ஹக்கீம், மனோ, திகாம்பரமும் எதிர்ப்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பில் 20ஆவது அரசமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை கூடிய விசேட அமைச்சரவையில் ஏற்பட்ட கருத்து மோதல்களையடுத்து அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
இந்த யோசனை இப்போதைய சூழ்நிலையில் – அதுவும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொண்டுவருவது முறையல்ல என்று சஜித் ஆதரவு அமைச்சர்களின் கடும் வாதப்பிரதிவாதங்களையடுத்து இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.
ரணில் ஆதரவு அமைச்சர்களும் இந்த யோசனைக்கு எதிராக இதன்போது கருத்து வெளியிட்டனர்.
அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, ரஞ்சித் மத்தும பண்டார, ஹரின் பெர்னாண்டோ, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பழனி திகாம்பரம் உட்பட்ட பல அமைச்சர்கள் இந்த யோசனையை எதிர்த்தனர். பிரதமர் ரணிலுடன் சில அமைச்சர்கள் மட்டுமே ஆதரவை வெளியிட்டனர்.
இதனால் முதலில் கட்சிக்குள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்திவிட்டு வருமாறு அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரி அறிவித்து விட்டார். பிரதமர் ரணில் கோரியதால்தான் தான் இந்த விசேட அமைச்சரவையைக் கூட்டியதாக அமைச்சரவையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து ரணில் – சஜித் அணிகளுக்கிடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.