நான் வேட்பாளராகக் களமிறங்கினால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதே பிரதான இலக்கு! – சபாநாயகர் கரு அதிரடி அறிவிப்பு
“ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே எனது பிரதான கடமை.”
– இவ்வாறு தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“கடந்த சில வாரங்களில் மதத் தலைவர்கள், பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், தொழில்முனைவோர், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்னைத் தொடர்பு கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குமாறு கோரினர்.
நாட்டினுள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், நிலவும் அரசியல் குழப்பத்தைப் போக்கிக் கண்ணியமான ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் நம்பிக்கைமிக்க தலைவர் ஒருவர் நாட்டுக்குத் தேவை என்பதால், அந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், நான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே எனது பிரதான கடமை.
1995ஆம் ஆண்டு முதல் நாம் தொடர்ச்சியாக முகங்கொடுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்காக ஒன்றிணையும் அரசியல் அணிகளுடன் மாத்திரமே நான் இணைந்து செயற்படவுள்ளேன்” – என்றுள்ளது.