ஐ.தே.க. எம்.பிக்களுக்கு ரணில் அவசர அழைப்பு! – அலரிமாளிகையை நோக்கி இன்றிரவு பலர் படையெடுப்பு

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என இன்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு வெளியாகியதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடன் தன்னைச் சந்திக்குமாறு கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அழைப்பு விடுத்தார். இதையடுத்து அலரி மாளிகையை நோக்கி ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றிரவு படையெடுத்து வருகின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கியுள்ளார். ஜே.வி.பி. தலைமையிலான ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுகின்றார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னமும் பெயரிடப்படவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாகவே இழுத்தடிப்பு நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையிலேயே அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தன்னைச் சந்திக்குமாறு ரணில் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *