தமிழ் – முஸ்லிம் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும்! – மைத்திரியிடம் எடுத்துரைத்தனர் இந்திய அரசியல்வாதிகள்
“இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கின்றன. இம்முறையும் அதேதான் நடக்கும்.”
– இவ்வாறு தெரிவித்தனர் இந்திய அரசியல்வாதிகள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் புதல்வியின் திருமண நிகழ்வு கொழும்பிலுள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் பலர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இரு நாட்டு அரசியல்வாதிகளுடனும் உரையாடினார். இதன்போதே அவரிடம் இந்திய அரசியல்வாதிகள் மேற்கண்டவாறு கூறினர்.
“இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித துன்புறுத்தலும் இன்றி சுதந்திரமாக வாழ வேண்டும். கடந்த காலங்களில் அவர்கள் சொல்லணாத் துயரங்களை அனுபவித்தார்கள். அந்த நிலைமை இங்கு மீண்டும் ஏற்படக்கூடாது. இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக தமிழ் – முஸ்லிம் மக்கள் உள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கின்றன. இம்முறையும் அதேதான் நடக்கும்” என்றும் அவர்கள் இதன்போது மேலும் தெரிவித்தனர்.