கனிமொழி உள்ளிட்ட இந்திய எம்.பிக்கள் ரணிலுடன் சந்திப்பு! – ஹக்கீம் குழுவினரும் பங்கேற்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அரசியல் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவரும் கலைஞர் கருணாநிதியின் புதல்வியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கனிமொழி, இந்திய நாடாளுமன்ற (லோக் சபா) உறுப்பினர்களான ஈ.ரீ. முஹம்மத் பஷீர், பீ.வீ. அப்துல் வஹ்ஹாப், கே.நவாஸ்கனி, கவிஞர் ஆளூர் சா நவாஸ், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் நாடாளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, பைசல் காசீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச். எம். எம். ஹரீஸ் ஆகியோரும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இரு தரப்பு அரசியல் விவகாரங்கள் மற்றும் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை குறித்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணிலின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *