2015ஆம் ஆண்டு போன்று இறுதி நேரத்திலேயே அதிரடி காட்டும் சு.க.! – சந்திரிகா பரபரப்புத் தகவல்
“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இறுதி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலிலும் இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிரடி காட்டும்.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
சர்வதேச செய்தி நிறுவனத்தின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் நான் பங்கேற்றிருந்தேன். அந்தக் கட்சி எனது தாய் வீடு. அந்தக் கட்சியிலுள்ள களைகளை அகற்றவேண்டும். அந்தக் கட்சிக்கு விசுவாசமானவர்களுடன் தொடர்ந்தும் இருப்பேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இப்போது முடிவை வெளியிடாது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இறுதி நேரத்தில் இடம்பெற்றதைப் போன்று அதிரடியான முடிவை எடுக்கும்” – என்றார்.