மஹிந்த குடும்பம் புறக்கணிப்பு! ஆனால் பங்காளிகள் பங்கேற்பு!! – அதிர்ச்சியில் மொட்டின் வேட்பாளர் கோட்டா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. ஆனால், மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.
வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, திஸ்ஸ விதாரண, டி.யூ. குணசேகர, ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
சு.கவின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான மஹிந்த ராஜபக்ச அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும், அவரின் பங்காளிகளின் தலைவர்களுக்கும் இன்றைய மாநாட்டுக்கு சு.கவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
ஆனால், மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பலர் இந்த நாட்டில் பங்கேற்றனர். அதனால் பங்காளிகளை நம்பியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அதிர்ச்சியடைந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துக் களமிறங்கினால் அக்கட்சியின் வேட்பாளரை மஹிந்த அணியின் பங்காளிகள் ஆதரிக்கக்கூடும் என்று அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். இது ராஜபக்ச குடும்பத்துக்குப் பலத்தை ஏமாற்றத்தைக் கொடுக்கும் எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.