வடக்கு மக்களை ஏமாற்றியது யார்? எதிர்வரும் தேர்தலில் பதில் தெரியும்! – நல்ல பிள்ளைக்கு நடிக்க வேண்டாம் என்று மைத்திரியைக் கடிந்தார் ரணில்

“நல்லபிள்ளைக்கு எவரும் நடிக்கக் கூடாது. எல்லாத் தவறுக்கும் ஜனாதிபதிதான் பொறுப்பு. வடக்கு மக்கள் எங்களை நம்பித்தான் மைத்திரிக்கு கடந்த தடவை வாக்களித்தனர். அவர்களை ஏமாற்றியது யார் என்பது, எதிர்வரும் தேர்தலில் தெரியவரும்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வடக்கு மக்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றிவிட்டது. அவர்களாலேயே புதிய அரசமைப்பு நிறைவேறவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பில் பிரதமரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் செய்யாத குற்றத்துக்காக பாவங்களைச் சுமக்க முடியாது. புதிய அரசமைப்பு விவகாரத்துக்காகக் குழுக்களை அமைத்து நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பு நகலைச் சமர்ப்பித்துள்ளோம். அதனைக் குழப்பியடிக்கும் வகையில் ராஜபக்ச அணியினர் செயற்பட்டனர். நாடெங்கும் இனவாதக் கருத்துக்களைப் பரப்பினர். பற்றி எரியும் இனவாதத்துக்கு அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தி எண்ணெய் ஊற்றியவர் மைத்திரி. புதிய அரசமைப்பு நிறைவேறாமைக்கு ஜனாதிபதியும், அவரை நம்பி ஆட்சி அமைக்கத் துடிக்கும் ராஜபக்ச அணியினருமே காரணம். வீண் பழிகளை நாம் சுமக்க முடியாது.

வடக்கு மக்கள் எம்மை நம்பித்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்தனர். நாம் அவர்களை ஏமாற்றினோமா? இல்லையா? என்பதை எதிர்வரும் தேர்தலில் அந்த மக்கள் நிரூபிப்பார்கள். நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றித்தான் வருகின்றோம். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு உட்பட்ட விடயங்களில்தான் பலவற்றை அவர் நிறைவேற்றவில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *