நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும்! – மைத்திரி அழைப்பு
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும். இதனை நாடாளுமன்றமே செய்யவேண்டும்.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படவேண்டும். அதனை நாடாளுமன்றமே செய்யவேண்டும். 4 ஆண்டுகளில் அவர்கள் அதனைச் செய்யவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.