‘கை’ வெட்டிய எஸ்.பி., டிலான் ‘மொட்டு’ கூட்டணியில் தஞ்சம்!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஸவை நேற்றுக் காலை சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே அங்கத்துவ அட்டையைப் பெற்றுள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கடந்த 26ஆம் திகதி மாலை கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.
இதன்போது எஸ்.பி. திஸாநாயக்கவிடமிருந்து பொருளாளர் பதவியையும், டிலான் பெரேராவிடமிருந்து ஊடகப் பேச்சாளர் பதவியையும் பறிப்பதற்கு மத்திய செயற்குழு அனுமதி வழங்கியது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கக்கூடாது என கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானம் எடுத்திருந்தது.
எனினும், மேற்படி தீர்மானத்தை மீறி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாநாட்டில் இருவரும் பங்கேற்றிருந்தனர். இதனை மையப்படுத்தியே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது.
இந்தநிலையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தஞ்சமடையும் முடிவை எஸ்.பியும், டிலானும் எடுத்துள்ளனர்.