லசந்த படுகொலை வழக்கு: இராஜதந்திர சிறப்புரிமையை எதிர்பார்க்கிறார் கோட்டாபய!

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ள கோட்டாபய ராஜபக்ச, ஒருவேளை அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும் இராஜதந்திரி என்ற அடிப்படையில் இந்த வழக்கு அணுகப்படவேண்டும் என்று தனது சட்டத்தரணி ஊடாகக் கோரியுள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், லசந்தவின் மகள் அமெரிக்காவின் கலிபோனியா மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குத் தொடர்பில் கோட்டாபாயவின் சட்டத்தரணிகள் புதிய மனுவை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர். அதிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின் முறைப்பாடு உண்மையாக இருக்கும் என்ற ஊகத்தில்கூட இந்த வழக்கில் சட்டபூர்வ ஆதாரப் பற்றாக்குறை இருப்பதாக கோட்டாபயவின் சட்டத்தரணிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில் இலங்கையர்கள் இந்த வழக்கை உன்னிப்பாக அவதானித்து வரும் வேளையில் கோட்டாபய ராஜபக்ச இந்தக் கருத்தை நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தக் குற்றச்சாட்டை கோட்டாபய ராஜபக்ச வன்மையாக மறுக்கின்றார் எனவும் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்க தொடுத்துள்ள இந்த வழக்கில் இலங்கையின் பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்ச அதிகார மட்டத்திலேயே இதனைப் புரிந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பொது சட்ட வெளிநாட்டு அலுவலர் சலுகையின் கீழ் விசாரித்து வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோட்டாபயவின் சட்டத்தரணிகள் அமெரிக்க நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *