மோடியுடன் முக்கிய பேச்சு நடத்த அடுத்த வாரங்களில் டில்லி பறக்கின்றது கூட்டமைப்பு!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடில்லிக்குப் பயணமாகவுள்ளது.

கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்தபோது, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசினோம். எங்களைப் புதுடில்லிக்கு வரும்படி அவர் கேட்டிருந்தார். அடுத்து வரும் வாரங்களில் அந்தப் பயணத்தை மேற்கொள்வோம் என நம்புகின்றோம்.

தேசிய பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு அளித்த உறுதிப்பாட்டை பேணுவதை உறுதி செய்வதில் இந்தியா இன்னும் தீவிரமான பங்கை வகிக்குமாறு புதுடில்லியிடம் வலியுறுத்துவோம்.

தேசிய பிரச்சினைக்கு இலங்கை இன்னும் தீர்வை வழங்கவில்லை என்ற உண்மை குறித்து நாங்கள் புதுடில்லியுடன் கலந்துரையாடுவோம்.

இந்த விடயம் தொடர்பான தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் – பேச்சுகளுக்கு உதவிய நாடுகளுக்கும் இலங்கை அரசால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இப்போதைய சூழலில், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் உணர வைக்க வேண்டியது அவசியம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டமைப்பு புதுடில்லி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு கடந்த 12ஆம் திகதி சென்றிருந்தார். அவர் அங்கு ஒரு வாரம் தங்கியிருந்தார். அவர் தனது மருத்துவத் தேவைக்காகவே இந்தியாவுக்குச் சென்றிருந்தார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *