மு.காவை வளைத்தெடுக்க மஹிந்த அணி பிரயத்தனம்! – ஹக்கீமுடன் பஸில் இரகசியப் பேச்சு
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் நடந்த இந்தப் பேச்சில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் தெரிவு மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பு ஆகியவற்றில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தப் பேச்சு நடந்துள்ளது.
இந்தச் சந்திப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பஸில் ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கடந்த ஆட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிக் கட்சியாக இருந்தது. இந்தநிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் மீண்டும் எமது ஆட்சி மலரப் போகின்றது. அதற்கு முற்கூட்டியே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறும் வகையில் அதன் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பேச்சு நடத்தியுள்ளேன். தமது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர்தான் இது தொடர்பில் முடிவெடுக்கலாம் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்” – என்றார்.
அதேவேளை, ஹக்கீமுக்கும் பஸிலுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை உறுதிப்படுத்திய மு.கா. தரப்பு, அதில் பேசப்பட்ட விடயங்கள் எதனையும் வெளிப்படுத்தவில்லை.