சவேந்திர சில்வா மீதான குற்றங்கள் பாரதூரமானவை – நம்பகரமானவை! – நியமனத்தைக் கடுமையாக எதிர்க்கின்றது அமெரிக்கா
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
“லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மிகுந்த கவலையடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களானது பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும்.
குறிப்பாக, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முக்கியமானதாகக் காணப்படும் இந்தத் தருணத்தில், இந்த நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாடுகளையும் வலிதற்றதாக்குவதாக அமைந்துள்ளது” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.