ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா இன்று அறிவிப்பு! – அவரின் ஊடகப் பிரிவு தகவல்
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று அறிவிக்கவுள்ளார் என்று கோட்டாபயவின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோட்டாபய ராஜபக்ச நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் தலைமைத்துவத்தை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ள மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பையும் வெளியிடவுள்ளார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான உதவியாளர்கள், அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கை அறிக்கையைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.