நான்தான் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர்! – ஏற்கனவே ரணில் வாக்குறுதி தந்துவிட்டார் என அடித்துக் கூறுகின்றார் சஜித்

“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்குவார்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியைத் துண்டாக்க நான் விரும்பவில்லை. கட்சியைவிட்டு வெளியேறும் எண்ணமும் எனக்கில்லை. கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் எனது தந்தை உயிரையே அர்ப்பணித்துள்ளார். எனவே, கட்சிக்குத் துரோகமிழைக்க நான் விரும்பவில்லை.

கடந்த ஒக்டோபர் அரசியல் சூழ்ச்சியின்போது நானே ஜனாதிபதி வேட்பாளர் என்று கட்சியின் தலைவர் எனக்கு வாக்குறுதி தந்திருந்தார். அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் தானே மீண்டும் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகவும் அவர் அப்போது என்னிடம் தெரிவித்திருந்தார். அதற்கமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நானே களமிறங்குவேன். அதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்குவார். ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறுவது உறுதி.

ஜனாதிபதித் தேர்தலை வைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக் குளிர்காய சிலர் முயல்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *