கண்டி வீதியில் கோர விபத்து! தாய், மகன் உட்பட மூவர் பலி!!
கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கொழும்பு நோக்கிப் பயணித்த வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வானின் சாரதி உட்பட 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அதில் வானின் சாரதியும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வானின் சாரதி, அவரது 47 வயதுடைய தாயார் மற்றும் 52 வயதுடைய பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
வானின் சாரதியின் தந்தை மற்றும் சகோதரி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
விபத்துச் சம்பவம் தொடர்பில் தனியார் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நிட்டம்புவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.