சஜித்தா? கருவா? என்று ஐ.தே.க. திண்டாட்டமாம்! – மஹிந்த கூறுகின்றார்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவா அல்லது கரு ஜயசூரியவா என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் திண்டாடுகின்றது என முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் மானம் காற்றில் பறக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க – சஜித் பிரேமதாச – கரு ஜயசூரிய என்று மூவருக்கிடையில் அரங்கேற இருந்த சமர் தற்போது சஜித் – கரு என்று இருவருக்கிடையில் மூண்டுள்ளது. இதனால் எவரை வேட்பாளராகக் களமிறக்குவது என்று ஐ.தே.கவின் உயர்பீடம் திண்டாடுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடையப் போகின்ற ஐ.தே.க., வேட்பாளர் விடயத்தில் நடுவீதியில் வந்து மோதுவதைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது.
சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஐ.தே.க. என்னதான் ஆட்டம் போட்டாலும் எமது அணியில் களமிறங்கும் வேட்பாளர்தான் வெற்றியடைவார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது அணி வெற்றியடைவது உறுதி” – என்றார்.