முதலில் புரிந்துணர்வு உடன்படிக்கை; பின்பே வேட்பாளர் யாரென அறிவிப்பு! – ஐ.தே.க. கூறுகின்றது
“ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் 5ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டவுடன் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய பல்வேறு கட்சிகளும் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியில் கைசாத்திடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அனைத்து மத குருமார்களினதும் ஆசீர்வாதத்துடன் இந்தப் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள் என்று அனைவரும் உள்ளடங்குவார்கள்” – என்றார்.