ஊடகவியலாளர்களுக்கு இலவச வாய்ப்பு! நைற்றா நிறுவனத்தின் மற்றொரு மைல்கல்!! – தலைவர் நஸீர் அஹமட் நடவடிக்கை

ஒரு தொழிலுக்காக ஏங்குகின்ற நிலை இந்த நாட்டில் இருக்கக்கூடாது. அனைத்துத் தரப்பினரும் தமது திறன்களை வலுப்படுத்திக் கொண்டு புதுபுது ஆளுமைகளுடனும் நவீன தொழில்நுட்ப அறிவுகளுடனும் தம்மை வளப்படுத்திக்கொண்டு அவர்தம் தொழில் துறைகளில் சிறந்து விளங்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (நைற்றா) தலைவருமான நஸீர் அஹமட் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

இப்பணிகளின் மற்றொரு மைல்கல்லாக நாட்டிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் NVQ-4 என்ற அரச அங்கீகாரம் பெற்ற தரச்சான்றிதழை இலவசமாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கான ஆரம்பப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊடகத்துறை யில் நான்கு ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள அனைவரும் இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள் ஆகின்றனர். சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இதற்கான தேர்வுகள் மாவட்ட ரீதியாக நடத்தப்படவுள்ளன.

இத்துறையில் பன்னெடுங்காலமாகப் பணியாற்றி வருபவர்களும் இத்துறையில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள விரும்புவோரும் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதன் மூலமாகப் பல்வேறு பயன்களை அடைய முடியும். ஜி.சீ.ஈ. உயர்தரத்துக்குச் சமனாக இந்தச் சான்றிதழ் அரச அங்கீகாரம் பெற்றுள்ளதால் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு இது பெரும் துணை புரிகின்றது.

இந்த விடயம் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தபோது:-

“நைற்றா நிறுவனத்தின் வரலாற்றில் மற்றும் ஒரு மைல் கல்லாக இதுவரை காலமும் ஊடகத்துறை மூலமாக நாட்டுக்குப் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு ஆர்.பி.எல். மூலமாக NVQ-4 என்ற சான்றிதழை வழங்கும் எற்பாடுகளை மேற்கொள்ள அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதுவரை காலமும் எந்தவொரு ஆர்.பி.எல். பயிற்சி நெறிகளும் கொடுப்பனவுகள் இன்றி இலவசமாக நடத்தப்பட்டது கிடையாது. எனினும், நான் இந்தப் பதவியை பாரம் எடுத்தலிருந்து பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து நடத்தி வருகின்றேன். இந்தவகையில் ஊடகவியலாளர்களுக்கும் கௌரவம் வழங்கும் வகையில் இந்த நெறியை இலவசமாக அவர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்.

இதனை அவர்கள் தனிப்பட்ட முறையில் பெறவேண்டுமாயின் ஏறத்தாழ 28 ஆயிரம் ரூபா வரை செலவு செய்யவேண்டியிருக்கும். இதனையும் தவிர்த்து அவர்கள் இதனை இலவசமாகப் பெற்றுக்கொள்ள நாம் வழிவகை செய்திருக்கின்றோம்.

அந்தவகையில் உடனடியாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்று அவற்றை 4 அல்லது 5 பிரிவுகளில் அவர்களுக்கான தேர்வுகளை – அமர்வுகளை நடத்தி இதனைச் செய்து முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

எனவே, அனுபவ ரீதியாகவும் ஆற்றல் மேம்பாட்டின் மூலமாகவும் இத்துறையில் கால்பதித்தவர்களும் இளையவர்களும் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதன் மூலமாகத் தத்தமது தொழில் துறைசார் கல்வி மேம்பாட்டுக்கும், வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளுக்கும் இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இத்துறை சார்ந்த பல்வேறு பயிற்சி நெறிகளைப் பயின்றவர்களுக்கும்கூட இந்தச் சான்றிதழ் மிகவும் முக்கியம் பெற்றதாக இருக்கும்.

இந்த வருட இறுதிக்குள் அதனை முடிக்க வேண்டும் என நான் கட்டளை பிறப்பித்துள்ளேன். எனவே, மாவட்ட ரீதியாக விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் நிலையில் இதனைத் துரிதமாகச் செய்து முடிக்க நீங்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள உடன் உங்கள் மாவட்டத்திலுள்ள நைற்றா காரியாலயங்களை நாடிப் பெற்றுக்கொள்ள முடியும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *