குளவிகள் கலைந்து கொட்டி கர்ப்பிணிப் பெண் மரணம்! – யாழ். மட்டுவிலில் சோகம்

குளவி கொட்டுக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண் நேற்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மட்டுவில் தெற்கைச் சேர்ந்த விமலராஜா இராஜயோகினி (வயது-37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தாயாவார்.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டுவில் தெற்கில் உள்ள அவர்களின் வீட்டில் இருந்த குளவிக் கூடு விழுந்து குளவிகள் கலைந்துள்ளன. அவை வீட்டில் உள்ளவர்களைச் சூழ்ந்து கொட்டியுள்ளன. வீட்டிலிருந்த சிறுவர்கள் இருவரும் தாயின் அறிவுறுத்தல்படி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தாய் 8 மாதக் கர்ப்பிணி என்பதால் வேகமாகத் தப்பியோட முடியவில்லை.

குளவிகள் அவரைச் சூழ்ந்து கொட்டியுள்ளன. அதனால் அவர் பெரும் அவலக் குரல் எழுப்பியுள்ளார். குளவிகள் சூழ்ந்திருந்தால் எவரும் அவரை நெருங்க முடியவில்லை. அந்தப் பகுதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரையும் குளவிகள் சூழ்ந்து கொட்டியுள்ளன. அவர் அவற்றில் இருந்து தப்புவதற்காக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் ஓட வேண்டியிருந்தது.

அயலவர்கள் 1990 அம்புலன்ஸ் வாகனத்துக்கு அறிவித்தனர். அவர்கள் அங்கு வந்தபோதும் அவர்களால் பெண்ணை நெருங்கி அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்ற முடியவில்லை. குளவிகள் அந்தப் பகுதியில் சூழ்ந்திருந்தன. அதனால் அங்கிருந்து அம்புலன்ஸ் வாகனத்தை அகற்றிச் சென்றனர்.

குளவிகளால் கொட்டப்பட்ட அவற்றில் இருந்து தப்புவதற்காக கர்ப்பிணிப் பெண் சுமார் 400 மீற்றர் தூரம் அம்புலன்ஸ் வாகனத்துக்குப் பின்பாகவே ஓடி வந்துள்ளார். அதன்பின்னர் குளவிகளின் தாக்கம் சற்றுக்குறைந்ததை அடுத்துக் குளவிகளைக் கலைத்துப் பெண்ணை அயலவர்கள் மீட்டனர். அதன்பின்னர் அம்புலன்ஸ் வாகனத்தில் அவர் ஏற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தநிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார். மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *