இரட்டைக் குழந்தைகள் கழுத்தறுத்துக் கொலை! – நிந்தவூரில் மனநிலை பாதிக்கப்பட்ட தாய் கொடூரம்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியிலுள்ள வீடொன்றில் பத்து மாதங்களான இரட்டைப் பெண் குழந்தைகள் மனநிலை பாதிக்கப்பட்ட தாயாரால் இன்று அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டின் கழிப்பறையில் குறித்த இரு குழந்தைகளும் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலை தொடர்பில் குறித்த குழந்தைகளின் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் சம்மாந்துறை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இரட்டைப் பெண் குழந்தைகளைக் வெட்டிக் கொன்ற தாய் ஏற்கனவே ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடும் மனவிரக்தியில் இருந்தார் என்று பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளது எனச் சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த மனவிரக்தியால் பாதிக்கப்பட்டிருந்த தாய் தொடர்பில் அவரின் கணவர் மிகவும் கவனத்துடன் இருந்தபோதும் அவர் சற்று அயர்ந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளையும் வெட்டிக் கொன்றது தானே என்றும், ஒருவித மனவிரக்தியில் என்ன நடந்தது என்றே தனக்குத் தெரியவில்லை என்றும் குறித்த தாய் தெரிவித்துள்ளார் என்று இது தொடர்பில் விசாரிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.