யாழில் ஆவாக் குழுவைக் கூண்டோடு ஒழிப்போம்! – பொலிஸ் திட்டவட்டம்

“யாழ். குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம்.”

– இவ்வாறு தெரிவித்தார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர.

அவர் மேலும் கூறுகையில்,

“யாழ். மானிப்பாயில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் வாள்வெட்டுக் குழுவான ஆவாக் குழுவின் உறுப்பினராவார்.

இவர் வீடொன்றில் தாக்குதலை மேற்கொள்வதற்காக தனது சகாக்களுடன் வாள்கள் மற்றும் கூரான ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர்களைப் பொலிஸார் சோதனைக்காக மறித்தபோது குறித்த இளைஞரும் ஏனையவர்களும் தப்பியோடினார்கள். இதனையடுத்தே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதன்போது துப்பாக்கிச் சன்னம் பட்டு குறித்த இளைஞர் உயிரிழந்தார்.

இவரும் இவருடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களும் பெரும் குற்றவாளிகள் எனப் பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

தப்பியோடியவர்களில் மூவர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, உயிரிழந்த இளைஞரின் ஏனைய சகாக்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். குடாநாட்டில் ஆவாக் குழுவினரின் அடாவடிகள் இன்னமும் அடங்கவில்லை. அவர்களைக் கூண்டோடு இல்லாதொழிப்போம். அப்போதுதான் பதற்றம் இல்லாத நிலைமை அங்கு உருவாகும்.

யாழில் ஆவாக் குழுவில் உள்ளவர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர். அங்குள்ள இளைஞர்களே ஈவிரக்கமற்ற அடாவடிகளில் ஈடுபடுகின்றனர். எனவே, பெற்றோர் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *