மஹிந்தவைத் தேடிச் சென்று சந்தித்தார் அமெரிக்கத் தூதர்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பு, விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, மஹிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அமெரிக்கத் தூதரகத்தின் வேண்டுகோளின் பிரகாரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள், தற்போதைய அரசியல் பின்னணி மற்றும் இரு நாடுகளுக்கிடையில் ஏற்கனவே இருக்கும் உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

எது எப்படி இருந்த போதிலும் அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படும் சோபா மற்றும் எக்ஸா உடன்படிக்கைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உட்பட கூட்டு எதிரணியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில், மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் இந்த விடயம் குறித்தும் அமெரிக்கத் தூதுவர் பேசியிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *