மட்டக்களப்பு சிறைச்சாலை சென்று பிள்ளையானைச் சந்தித்தார் மனோ!
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், மாமனிதர் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பிள்ளையான், 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
“சில பொதுவான நண்பர்கள், பிள்ளையானைச் சந்திக்கும்படி வலியுறுத்தி இருந்தார்கள். அதற்கமைய இன்று மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். இதன்போது இருவரும் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால தமிழர் அரசியல் நடப்புகள் குறித்துக் கலந்துரையாடினோம். இவை தொடர்பில் மேலதிக விபரங்களைத் தெரிவிப்பது தற்சமயம் உசிதமில்லை” என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.