சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தைப் பார்க்கச் சென்ற நால்வர் சந்தேகத்தில் கைது!
யாழ். மானிப்பாயில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று சென்ற 4 பேர், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் நால்வரும் கொல்லப்பட்டவருடன் அலைபேசி ஊடாக இறுதியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்றிரவு இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொடிகாமம் – கச்சாய் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது 23) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் ஆவாக் குழு உறுப்பினர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், இன்று உயிரிழந்த இளைஞரின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்குச் சென்ற நிலையில் குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரும் மானிப்பாய் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.