இன்று இலங்கை வருகின்றார் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்!
அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.
அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
கொழும்பிலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டு, மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார்.
அரச உயர்மட்ட அதிகாரிகளையும், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்களையும், மனித உரிமை ஆணைக்குழுவையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
அவர் தனது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த வருடம் ஜுன் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.