யாழ்ப்பாணத்தில் ரணில்! – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி விழாவில் பங்கேற்பு
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு நேற்று மாலை சென்ற பிரதமர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் கலந்துகொண்டார்.
இதன்போது அக்கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள கேட்போர் கூடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததுடன் பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பாடசாலையின் 125 ஆவது ஆண்டு விழா பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம விருந்தினராகப் பிரதமர் ரணில் கலந்துகொண்டு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட கல்வி அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.