மைத்திரியின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்ற சஜித்தை நம்பலாமா? – கேள்வி எழுப்புகின்றார் பொன்சேகா
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்ற அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க ஆசைப்படுகின்றார்? இவரை எப்படி நாம் நம்புவது?”
– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சரான சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்தாலும், இவர் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே செயற்படுகின்றார். இவர் ஜனாதிபதியின் தேவைகளையே நிறைவேற்றி வருகின்றார். ஜனாதிபதி கூறும் விடயங்களைத்தான் இவர் ஏற்றுக்கொள்கின்றார். இப்படிப்பட்டவர்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க ஆசைப்படுகின்றார். இவரை எப்படி நாம் நம்புவது?
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட ஆசைப்படுகின்றார். தனக்கு வாக்குகள் தேவை என்பதற்காகச் சிறைச்சாலையில் உள்ள மனிதர்களைத் தூக்கில் போட அவர் முயற்சிக்கின்றார். மரணதண்டனைக்கு எதிராகவே ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது. அதேநிலைப்பாட்டில்தான் நாங்களும் உள்ளோம்” – என்றார்.