மீண்டும் காட்டாட்சியை தமிழர் விரும்பவில்லை! – அதனால் கூட்டமைப்பு எம்மை ஆதரித்தது என்கிறார் ரணில்

“இந்த நாட்டில் மீண்டுமொரு காட்டாட்சியை தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த அரசை எவராலும் கவிழ்க்கவே முடியாது. மீண்டும் இந்த நாட்டை நாசம் செய்ய எவருக்கும் நாம் இடமளிக்கமாட்டோம். எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் நாமே வெல்வோம். இந்த நாடு தற்போது ஜனநாயக நாடு.

இந்த நாட்டில் மீண்டுமொரு காட்டாட்சியை தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள்.

தமிழ் மக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்வோம். வடக்கு, கிழக்கில் எமது அபிவிருத்தி வேலைகள் துரிதகதியில் நடைபெறுகின்றன.

சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று மூவின மக்களும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ வேண்டும். இனவாதிகளின் கருத்துக்களுக்கு நாட்டு மக்கள் செவிசாய்க்கக்கூடாது. ஏப்ரல் 21 தாக்குதல் போன்று இனிமேலும் ஒரு தாக்குதல் இந்த நாட்டில் இடம்பெற நாம் இடமளிக்கமாட்டோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *